முதலமைச்சர் ஒப்படைத்தார்: ஏனையோரிடம் கட்டாய பறிப்பு?


வடக்கு மாகாண சபையில் தனது அலுவலகத்திற்கென வழங்கப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களையும் முன்னாள் முதலமைச்சர் மீள தனது அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.அவரது நல்லூர் கோவில் வீதியிலிருந்த தற்காலிக வாசஸ்தலத்திலிருந்து அனைத்து அரச சொத்துக்களையும் அவர் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக அவரது அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவற்றினுள் அவரது பயன்பாட்டிற்கென ஒதுக்கி வழங்கப்பட்டிருந்த வாகனங்களும் மீள கையளிக்கப்பட்டுள்ளவற்றினுள் உள்ளடங்கியுள்ளது.

அதே போன்று அவருடன் இருந்த அமைச்சர்களும் தமது வாகனங்கள் உள்ளிட்டவற்றினை மீள ஒப்படைத்துள்ளனர்.

எஞ்சிய உறுப்பினர்களில் தனிப்பட்ட அலுவலகங்களிற்கு கொள்வனவு செய்த தளபாடங்களை பதிவு நீக்கம் செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த பொருட்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்ட நிதி சபையின் நேரடியான நிதியென தெரியவருகின்றது.அந்நிதியில் உறுப்பினர்களின் அலுவலகங்களிற்கு கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பேரவைச் செயலக சொத்து விபரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இணைக்கப்பட்ட சொத்துக்களை உறுப்பினர்களிடமே கையளிப்பதானால் அவற்றினை மீண்டும் சொத்துப் பதிவு நீக்கம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அவ்வாறு சொத்துப் பதிவு நீக்கம் செய்வதற்கு சபையின் அனுமதி மட்டும் போதாது எனவும் அவற்றினை மீளவும் கையளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் அவ்வாறு சொத்துப் பதிவு நீக்கம் செய்ய முடியாதென அரச கணக்காய்வு திணைக்களமும் சுட்டிக்காட்டியுள்ளதனால் குறித்த சொத்துகளை மீளக் கையளிக்க கோரப்படவுள்ளது.

குறித்த நிதியில் சயந்தன்,அஸ்மின் உள்ளிட்ட பலரும் வதிவிடங்களிற்கு குளிரூட்டி வசதிகளை பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை தெரிந்ததே.

No comments