கடும் மழை - முல்லைத்தீவில் வெள்ளப்பெருக்கு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவந்த மழை காரணமாக நித்தகை குளம் உள்ளிட்ட சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று (07) மாலை வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 647 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கரைதுறைப்பற்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 26 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 179 குடும்பங்களை சேர்ந்த 566 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும், வெலிஓயாவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவட்டத்தில் பல சிறுகுளங்கள் நீர் நிரம்பியுள்ளதுடன் நித்தகை குளம் உள்ளிட்ட நான்கு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

அண்மையில் புனரமைக்கப்பட்ட நித்தகை குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஆண்டான்குளம் ஊடாக நாயாற்றில் நீர் அதிகரித்துள்ளது.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் குளம், கரிப்பட்ட முறிப்பு குளம் ஆகியன உடைப்பெடுத்துள்ளன. நீர் நிரம்பியுள்ளதால் இரண்டு குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளன. சாளம்பன் குளம் உடைப்பெடுத்துள்ளதால் அதனை விவசாயிகளின் உதவியுடன் 64 ஆவது படைப்பிரிவினரும் இணைந்து அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை மாந்தை கிழக்கில் பாண்டியன் குளம், பெரியகுளம், கணக்கனார் குளம், ஆகியன உடைப்பெடுத்துள்ளதாகவும் வவுனிக்குளத்தின் நீர்மாட்டம் 17.4 அடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதுக்காக 64 அவது  படைப்பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன் முப்படையினரும் இணைந்து மக்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments