பாராளுமன்ற உறுப்பினர்கள் 500 மில்லியனுக்கு விலை பேசப்பட்டனர் - மைத்திரி அதிர்ச்சி


தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன். இதன் முக்கியத்துவம் யாதெனில் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் உங்கள் முன் உரையாற்றுவதாகும். குறிப்பாக மிகச் சுருக்கமாகவேனும் பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நமது நாட்டில் பாராளுமன்ற சம்பிரதாயம் அதாவது இலங்கை பாராளுமன்றம், இலங்கை தேசிய அரச பேரவை காலம் முடிவடைந்ததன் பின்னர் 1947 இல் முதலாவது பாராளுமன்றம் ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை பொதுத் தேர்தல்களுக்கமைய அரசாங்கங்கள் மாற்றப்பட்டு புதிய அரசாங்கங்கள் பதவியேற்று இந்த நாட்டின் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.
குறிப்பாக தற்போதைய பாராளுமன்றத்தின் நிலைமை கடந்த வாரமளவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தன்மையின் அடிப்படையிலும் நன்னடத்தைமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புமிக்க நாட்டின் உன்னத ஸ்தானமும் மக்களின் இறையாண்மையை வெளிப்படுத்தும் மிக உயரிய ஸ்தானமுமாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது.

நம் நாட்டின் பாராளுமன்றத்தினுள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் மாற்றங்கள் பற்றிய அனுபவத்தை நாம் பெற்றிருக்கின்றோம். 1964 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் சட்டத்தை எதிர்க்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் இச்சமயம் எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அதன் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது. ஆயினும் 47 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கலைக்கப்பட்ட பாராளுமன்றங்கள் ஊழல் காரணமாக கலைக்கப்பட்டதாக அறிவதற்கில்லை. 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கியதை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும். உங்களது மதிப்பிற்குரிய வாக்குகளைப் பெற்று இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தமது வணிக பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது எந்தளவிற்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிஷ்டமான நிலையாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்

இதுவே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன். அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பராவார். நம் நாட்டு பாராளுமன்ற சம்பிரதாயத்தினுள் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள் அவர்களது நடுநிலைத் தன்மையையும் பக்கச்சார்பின்மையையும் மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நிலைமை 1947 முதல் இதுவரை இருந்து வந்தது. பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது ஜனாதிபதிக்குரிய விஷேட அதிகாரங்களுக்கமைய பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி சபாநாயகரினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாக அமைந்ததென்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

இங்கே அரசியல் ரீதியான ஒரு நிலைமையினை கவனத்தில் கொள்ளும் வகையில் உங்களது ஞாபகத்திற்கு இவ்விடயத்தையும் கொண்டுவர விரும்புகிறேன். 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர் அதற்கு மறுநாள் ஜனாதிபதியாக நான் பதிவியேற்ற மறுகணமே கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தினேன். அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களில் 225 பேரில் 162 உறுப்பினர்களின் பலம் இருந்த டி.மு.ஜயரத்ன அவர்களை நீக்கிவிட்டே 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தினேன். இந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

அச்சமயம் இன்று பலரும் பேசுகின்ற பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பற்றி எவரும் பேசவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். பெரும்பாலும் ஜனாதிபதியினால் நம்பிக்கை வைக்கத்தக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை வெல்லத்தக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பில் காணப்படுகின்ற உடன்படிக்கைகளுக்கு அமைய நியமிப்பதே சம்பிரதாயமாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நிலையியற் கட்டளை, அரசியலமைப்பின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும். இருப்பினும் ஒரு பிரதம மந்திரியை நியமித்து அவர் பாராளுமன்றத்திற்கு செல்லும் முதல் தினத்திலேயே அவர் மீதான நம்பிக்கை இருக்கின்றதா என்பதை பற்றிய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு எமது பாராளுமன்ற சம்பிரதாயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை. நிலையியற் கட்டளைகளுக்கு கீழும் அவ்வாறு நடப்பதில்லை.

இருப்பினும் பாராளுமன்றத்தின் அச் சம்பிரதாயத்தை மீறி கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அவரது முதலாவது அறிக்கையில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக ஏற்று அவருக்கான உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பாராளுமன்றத்தில் பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதாவது பாராளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனம், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான அலுவலகம் ஆகியன பெற்றுத்தரப்படும் என முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதற்கு சில தினங்களின் பின்னர் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை முதலாவது அறிக்கையை விட முற்றிலும் வேறுபட்டவொரு அறிக்கையாக அமைந்தது.

அதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமராக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு ஏற்படும் நிலைமையைப் பற்றி நான் மிகுந்த கவனத்தை செலுத்தினேன். அத்தோடு இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.

அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி அதனைக் கலைக்காது அந்த மோதலை உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு நாட்டில் சாதாரண சிவில் மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.

ஆகையால் இதற்கான சிறந்த தீர்வாக 225 பேருக்கிடையிலான மோதல் நாடு தழுவிய ரீதியிலான பாரிய மோதலாக மாறி இயல்பு நிலை சீர்குலைவதற்கு வழிவகுப்பதற்கு பதிலாக எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மிக உயர்வாக மதித்து சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டின் வாக்குரிமை பெற்றிருக்கும் 150 இலட்ச வாக்காளர்களிடம் அவ்வதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும் அதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மையையும் சபாநாயகரின் செயற்பாட்டினால் ஏற்பட்ட முரண்பாடான நிலைமையின் உருவாக்கமுமாகிய அனைத்தையும் கருத்திற் கொண்டு உருவாகிய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக அப்பொறுப்பினை பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான் பாராளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன். அதன்மூலம் இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்கு தெளிவான நிலையான தீர்வு பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும் என்பதை இங்கு கூறவேண்டும்.

No comments