சுமந்திரன் சொன்ன புனர்வாழ்வு 20 வருட சிறையாம்?

குறைந்த தண்டனையுடன் புனர்வாழ்வு அளிப்பதாக எம்.ஏ.சுமந்திரனிற்கு அரசு அறிவித்த அரசியல் கைதிகளில் இருவரிற்கு 20 வருட சிறத்தண்டனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இன்று சிபார்சு செய்துள்ளது.குற்றத்தை ஒப்புக்கொண்டால் 20வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாமெனவும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6வருடங்களை கழித்துக்கொண்டு 14 வருட தண்டனையினை பெற்று அனுபவித்த பின்னர் புனர்வாழ்வுடன் விடுவிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராக இல்லையென அரசியல் கைதிகள் தெரிவித்ததையடுத்து எம்.சு.சுமந்திரன் -இலங்கை நீதியமைச்சர் அரங்கேற்றமுற்பட்ட நாடகம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

நீதியமைச்சர் முன்னிலையில் சட்டமா அதிபருடன் எம்.ஏ.சுமந்திரன் நடத்திய பேச்சில் அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளில் முதலில் போராட ஆரம்பித்த 8 பேரில் 2 பேர், ஏற்கெனவே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டவர்கள் என்பதால், அவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அதன் பின்னர் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

ஏனையோரில் 3 பேர் தொடர்பான வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்வார்களாயின், அவர்களையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தையும், சட்டமா அதிபர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை ஏற்றேனும் புனர்வாழ்வுடன் வீடு திரும்பலாமென்ற கனவுடன் அரசியல் கைதிகள் வவுனியா மேல்நீதிமன்றிற்கு சென்றிருந்தனர்.

அப்போதே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாமெனவும் எனினும் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் 20 வருட சிறைத்தண்டனை விதிப்படுமென தெரிவிக்க்பபட்டுள்ளது.அதில் ஏற்கனவே சிறையிலிருந்த 6வருடங்களினை கழித்து 14வருட சிறைத்தண்டனையினை அனுபவித்த பின்னர் புனர்வாழ்வில் செல்ல முடியுமென பேரம் பேசப்பட்டுள்ளது.

இதனை அரசியல் கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

இதன் மூலம் அரசியல் கைதிகளிற்கு தண்டனை வழங்கும் அரசு - சுமந்திரன் கூட்டு சதி முயற்சி அம்பலமாகியுள்ளது.

No comments