முதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்!

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2015 இல் ஆட்சி மாற்றம் ஒன்றைக்கொண்டு வந்தது. எந்த நிபந்தனையும் இல்லாமல் 3 வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். இவை உங்களையும் உங்கள் கட்சிகளையும் பாதுகாப்பதுக்காகவா, அல்லது மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து செயற்படப்போகின்றீர்களா என்ற கேள்வியை கூட்டமைப்பினரிடம் மக்கள் கேட்க வேண்டும்.

மக்கள் விழிப்படையாதவரை ஏமாற்றும் ஒரு கூட்டம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கும். எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 16 வருடங்களாக மக்களை புறந்தள்ளிவிட்டு சுயநலமாக சென்றுகொண்டிருக்கின்றனர். ஆகவே அடுத்தது என்ன தெரிவு என மக்கள் கேட்கலாம்.

அதற்கு மாற்றுத்தெரிவொன்று உள்ளது. அது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது கரங்களை பலப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவர் இன்று எமது மக்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காவும் உறுதியாக குரல்கொடுத்துக்கொண்டிருப்பவர்.

ஆகவே அவரது கரங்களை பலப்படுத்தி அடுத்து முக்கிய மாற்று அரசியல் அணியொன்றினை உருவாக்குவோம்.

சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக அல்லது அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் ஆட்களாக போகின்றனர் என்பதுக்காக நாம் இதில் இருந்து ஒதுங்க முடியாது. தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமையொன்று தேவை. அதனை நாம் வெகு விரைவில் உங்களது ஒத்துழைப்போடு உருவாக்குவோம் என தெரிவித்தார்.

No comments