தமிழ் இளைஞர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது


வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்குப் போலிக் கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக இவர்கள் போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் நேற்று அதிகாலை விமான நிலைய இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது – 37) , அரியரத்னம் விஜய் (வயது-22) மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த மதியதேவாஸ் நிரோஜன் (வயது – 28) ஆகிய தமிழர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த இருவர் இரகசியப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments