பிள்ளையானுக்காய் கண்ணீர் சிந்திய நாமல் ராஜபக்ச


அரசாங்கத்துடன் இணைந்து, விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு பாடுபட்ட பிள்ளையானை, நல்லாட்சி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமையானது, மோசமான நடவடிக்கையாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, நேற்று(29) சென்ற அவர், அங்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்தித்தார். அவருடன், சட்டத்தரணிகள் இருவரும் வருகை தந்திருந்தனர். 

இதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம், அரசியல் பலிவாங்கலுக்கா, சிலர்மீது பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை சிறையில் அடைத்து வருகின்றது என்றும் அதேபோன்று, தன்னையும் மூன்று முறை சிறையில் அடைத்தது என்றும் அவர் கூறினார்.

மேலும், பிள்ளையானையும் சிறையில் அடைத்துள்ளமை, மிகவும் மோசமான செயற்பாடு என்றும் கூறினார்.

ஜனாதிபதி முறைமையை, 100 நாள்களுக்குள் இல்லாமல் செய்வோம் என்று கூறி இந்த அரசாங்கம், இன்னும் அதை இல்லாமல் செய்வதற்கு இழுத்தடிப்பு செய்து வருகின்றமையானது, அவர்களுக்குள்ளேயே குழப்பங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, எனது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்ன செய்தார் என்பது, வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

No comments