குருந்தூர் மலைக்குச் செல்லத் தடை


முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை - தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள்.

இதன்போது, பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன், ஒட்டுசுட்டான் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதந்து குறித்த பிக்குமார் உள்ளிட்ட 12 பேரையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளதாகத் தெரிவித்ததுடன் அது தொடர்பான பூகோளவியல் பணிப்பாளர் கொடுத்துள்ள கடிதத்தையும் காட்டியுள்ளார்கள்.

இதன் பின்னர் குறித்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேரையும் பொலிஸார் விடுவித்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பிலும் குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தடை விதிக்க கோரியும் கடந்த 05ஆம் திகதி அன்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணை, வியாழக்கிழமை (06) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தரவைப் பிறப்பித்த நீதவான், விகாரை ஆய்வுக்காக பிக்குமார் செல்வதற்கு அனுமதிகொடுத்த பூகோளவியல் பணிப்பாளரின் கடிதத்தின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்துமாறு தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பிலான வழக்கு விசாரணை 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments