வெறுங்கையுடன் திரும்பிய சிறிலங்கா


இந்தோனேசியாவில் நேற்று நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறிலங்கா உள்ளிட்ட 9 நாடுகள் எந்தவொரு பதக்கத்தையும் பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பின.

ஆசிய விளையாட்டுப் போட்டி- 2018 இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பங் ஆகிய நகரங்களில் கடந்த ஓகஸ்ட் 18ஆம் நாள் ஆரம்பித்து நேற்றுடன் நிறைவடைந்தது.

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா, பங்களாதேஷ், பூட்டான், புரூணை, மாலைதீவு, ஓமான், பலஸ்தீனம், திமோர் லெஸ்தே, யேமன் ஆகிய 9 நாடுகளின் அணிகள் வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளன.

சிறிலங்காவில் இருந்து 172 பேர் கொண்ட அணி இந்தப் போட்டிகளுக்காக சென்றிருந்தது.

பளுதூக்குல்,  தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, கரப்பந்து, கடற்கரைக் கரப்பந்து, பூப்பந்து, குழிப்பந்து, மல்யுத்தம், ஹொக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, நீச்சல், ரக்பி, ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், மேசைப்பந்து, குத்துச்சண்டை, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறிலங்காவில் இருந்து சென்ற வீரர்கள் பங்கேற்றனர்.

எனினும், எந்தவொரு பதக்கத்தையும் பெற்றுக் கொள்ளாமல் சிறிலங்கா வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

No comments