நான் அரசியலுக்கு வரமாட்டேன் - சங்ககார


நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என நான் நம்புகிறேன்.

பொதுச்சேவையில் பொறுப்புக்கூறல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, மரியாதை என்பவற்றுடன் பணியாற்ற வேண்டும்.

பொதுமக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பொது ஊழியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் எனது பிரதான நோக்கம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமேயாகும். அறக்கட்டளைகளுடன் இணைந்து பல்வேறு சேவைகளை ஆற்றுவதற்கு விரும்புகின்றேன்.

கிரிக்கட் துறையில் தொடர்ந்தும் ஏதோ ஓர் வகையில் சேவையாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

No comments