முகாம்களை மூடமாட்டோம் தேவையெனில் சுருக்குவோம்


வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

”வடக்கு, கிழக்கில் மேலும 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

இந்தக் காணிகளை விடுவிக்க முன்னர், எமது உட்கட்டமைப்பு வசதிகளை நகர்த்த வேண்டியுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

இதற்காக 800 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். ஏற்கனவே 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகையை இன்றைக்கு வழங்கினால் கூட, ஒரே இரவில் முகாம்களை அகற்றி விட முடியாது. எமது படையினரை இடம்மாற்றுவதற்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கு 5 மாதங்களாவது தேவைப்படும்.

எனவே, ஆறு மாதங்களுக்குள் நிதியை வழங்கினால், எமது கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, நாங்கள் வேறு இடத்துக்கு நகர முடியும் என்றார்.

No comments