முல்லைதீவு போராட்டம் :நல்லதொரு ஆரம்பம்!

தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவது வெறுமனே ஆட்சிமாற்ற பிரச்சினை அல்ல. அது இன அழிப்பு பிரச்சினை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிங்கள குடியேற்றங்களால் மணலாறு ஆக்கிரமிக்கப்படுமாக இருந்தால் அது தமிழ்தேசம் அழிந்துபோனமைக்கு சமமானதாகும். இந்நிலையில் இந்த குடியேற்றங்களை தடுக்க ஒன்றிணைவது அவசியமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மணலாறு சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து  முல்லைத்தீவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என கூறப்பட்டது. அதனால் ஆட்சிமாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டது. 

ஆனால் ஒன்றுமே மாற்றமடையவில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இன அழிப்பின் முக்கிய கட்டமாகும். இது ஆட்சிமாற்றம் சம்மந்தப்பட்டதா? அல்லது இன அழிப்பு சம்மந்தப்பட்டதா?  என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இது அப்பட்டமாக இன அழிப்பு சம்மந்தமானது. இதேபோல் இந்த இன அழிப்பின் பின்னால் உள்ள காரணிகளையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். 

சிங்கள மக்களை பொறுத்தளவில் இது புத்தர் தமக்கு கொடுத்த தீவு என்ற கற்பனையில் உள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வது  முரணாக தெரிகிறது. 

இவ்வாறான நிலையில் எந்த நபர்கள் மாறினாலும், எந்த ஆட்சி மாறினாலும் ஒன்றும் மாறப் போவதில்லை. 2016ல், 2017ல், 2018ல் தீர்வு வரும் என நம்பி..நம்பி.. ஏமாந்தது மட்டுமே மிச்சம். இந்நிலையில் மணலாறு பிரதேசம் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்படுவது,அல்லது வடகிழக்கு இணைப்பபை நிரந்தரமாக துண்டிப்பதற்கு, சிதைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தமிழ்தேசத்தின் அழிவுக்கு ஒப்பானதாகும். இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் இந்த ஒட்டுமொத்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதுமிக முக்கியமானது. இதனை ஒரு தொடக்கமாகக் கருதவேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


No comments