குற்றவாளிகளை காப்பாற்றும் காவல்துறையும் சட்டமும்!

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் காவல்துறையினரின்  விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையென சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் காவல்துறையினரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்த போதும் அதனால் என்ன நடந்ததென அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள்,காவல் மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தரித்திருந்த வேளை வாள் வெட்டு சம்பவங்கள் நடந்தன.

இத்தகைய தாக்குதல் கும்பல்கள் எவையேனும் கைது செய்யப்பட்டனவா அல்லது தண்டிக்கப்பட்டார்களாவென்றால் அதற்கு பதிலில்லை.

அதிலும் குறிப்பாக இத்தகைய குற்றவாளிகள் கும்பலுடன் காவல்துறையும் சட்டத்தரணிகளும் நெருங்கிய நட்பை கொண்டிருப்பதுடன் அவர்களே பாதுகாவலர்களாகவும் இருக்கின்றனர்.

ஒருபுறம் காவல்துறையும் நீதித்துறையும் கண்டுகொள்ளாமையால் அவர்கள் கொள்ளைகளின் மூலம் பணம் ஈட்டுகின்றனர்.அதனை கொண்டு வன்முறைகளினில் ஈடுபடுகின்றனர்.
காவல்துறை அதிகாரிகள் பலரும் இடமாற்றம் பெற்று சொந்த ஊர் திரும்புகையில் இலட்சாதிபதிகளாகவே செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments