வடக்கு பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு



தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் எதிர்வரும்-20 ஆம் திகதி வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் சுட்டிக் காட்டி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இன்றைய தினம்(13) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்திற்குச் சென்ற வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்ஜிடம் முறைப்பாட்டு மகஜரொன்றைக் கையளித்தனர்.


தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எழுத்துவடிவில் முறைப்பாடுகளை வழங்குமிடத்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் பாதிக்கப்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்குத் தெரிவித்தார்.

இதனையடுத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் தனித்தனியான முறைப்பாட்டுக் கடிதங்களையும் சமர்ப்பித்துள்ளனர். முறைப்பாட்டுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார். இதேவேளை, தகுதியிருந்தும் பாதிக்கப்பட்ட ஏனைய வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை செவ்வாய்க்கிழமை(14) முற்பகல்-09 மணி முதல் 04 மணி வரை தங்கள் முறைப்பாடுகளை யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் தவறாது பதிவு செய்யுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

No comments