வெடுக்குநாறிமலை:வழிபட,சென்றுவர தடையில்லையாம்!


வெடுக்குநாறி மலையில் இந்துக்கள் வழிபாட்டுக்கான உரிமையை தொல்பொருள் துறையினர் தடுத்தமை கடும் எதிர்வினைகளை ஆற்றியிருந்த நிலையில் இந்துக்கள் வழிபட எந்த தடையுமில்லையென இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

எனினும் நிர்மாண வேலைகளை மேற்கொள்ள கூடாதெனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கை தொல்லியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில் மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி காவல்துறை அறிவித்திருந்தது.

இத்தகைய அச்சுறுத்தல்களின் மத்தியில் கடந்த சனிக்கிழமை ஆடிஅமாவாசை வழிபாடுகள் நடந்துள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டின் பேரில் தற்போது வெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் தமிழ் மக்கள் செல்லக்கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களது பூர்வீக மண்ணான நெடுங்கேணியில் அமைந்துள்ள தொல்லியல் வரலாற்றை கொண்ட பிரதேசத்தை முடக்குவதன் மூலம் அங்கு பௌத்த மத கதைகளை உருவாக்க தொல்லியல் திணைக்களம் முன்னிட்டுள்ளதாக எதிர்வினைகள் ஆற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஆலய நிர்வாக சபையினை அழைத்த நெடுங்கேணி காவல்துறை ஆலயத்தில் வழிபட மற்றும் சென்றுவர எந்தவித தடையுமில்லையென அறிவித்துள்ளதுடன் கட்டுமானபணிகளில் ஈடுபடவேண்டாமென அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

No comments