பைஸர் முஸ்தபா பதவி விலக வேண்டும்


பாராளுமன்றத்தில் கொண்டு வரபட்ட மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டமையால், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.பீ. ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பீ. ரத்நாயக்க, எந்த முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் அதற்கு நாங்கள் தயார், அதனால் தான் கூறுகின்றேன் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என்பதனை நான் உறுதியாக கூறுகிறேன் என குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சார்ந்த நாங்கள் பிழையான விடயங்களை பிழையென கூறுவோம், சரியான விடயங்களை சரியென கூறுவோம், ஆகையால் தான் பிழையான விடயங்களுக்கு நாங்கள் எதிர்பினை தெரிவிக்கின்றோம்.

இதேவேளை, கொழும்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இடம் பெறவிருக்கின்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலையக மக்களை கலந்து கொள்ளுமாறும் இந்த ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

No comments