மீண்டும் செம்மணியில் புதைகுழிகள்:எச்சங்கள் மீட்பு!


1998ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்குடாநாட்டின்  காணாமல் போனோர்களது புதைகுழியென அடையாளப்படுத்தப்பட்ட செம்மணி பகுதியில் மேலும் புதைகுழிகள் இருக்கலாமென்ற சந்தேகம் வலுத்துள்ளது.மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலையின் சூத்திரதாரியாக கோப்ரல் ராஜபக்ஸ அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் படையினரால் கொல்லப்பட்டு செம்மணி பகுதியிலேயே புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தான்.அத்துடன் சில புதைகுழிகளை காண்பித்துமிருந்தான்.அதிலிருந்து எரும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செம்மணியை அண்மித்த கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

யாழ்- இரணைமடு குடிநீர் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபடுகின்றது.

இதனால் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து சபையின் அதிகாரிகளுக்கு தொழிலாளர்கள் அறிவித்தனர். சபையின் அதிகாரிகள் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியையும் நேரில் வந்து பார்வையிட்டனர்.இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர்கள் நடவடிக்கை எதனையுமே எடுக்கப்படவில்லையென சொல்லப்படுகின்றது. வருகை தந்த இலங்கை காவல்துறையினர்; மனித எச்சங்கள் உள்ள பகுதியை பார்வையிடவுமில்லை. மாறாக அதிகாரிகளுடன் பேசிவிட்டுச் சென்றதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கல்வியங்காடு நாயன்மார்க்கட்டில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் போர்க்காலத்தில், முன்னரங்கு காவலரண் அமைத்து இலங்கை இராணுவம் நிலை கொண்டிருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கல்வியங்காடு நாயன்மார்க்கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர் தாங்கி நிர்மானிக்கும் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இன்று வெள்ளிக்கிழமை இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியைச் சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் மூன்று அடி ஆழத்திற்கு மண்ணை அகழ்ந்தபோது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.

ஆழமாக்கப்பட்ட குழியின் மேற்குத் திசை நோக்கியே குறித்த மனித எச்சங்கள் காணப்பட்டன. இந்திய நிறுவனம் ஒன்று இந்தக் கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளதால். மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தை முக்கியப்படுத்தவில்லை.

விசாரணைக்காக கட்டடப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த இந்திய நிறுவன அதிகாரிகளும் விரும்பவில்லை. இதனால் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க இலங்கைகாவல்துறை அனுமதித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

No comments