மைத்திரி கிளிநொச்சி வருகை: எதிர்ப்பிற்கு தயாராகும் சிறீதரன்!

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யர்து கிளிநொச்சிக்கு இலங்கை ஜனாதிபதி வருவராயின் அவரது வருகையினை எதிர்க்கவுள்ளதாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளைக்  காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களைப் பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்க வருவது மிகவும் வேடிக்கையானதென தெரிவித்திருப்பதுடன் எதிர்ப்புப்போராட்டத்தை முன்னெடுக்க தனது ஆதரவாளர்களை பணித்துள்ளார்.

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள நிலையிலேயே சி.சிறீதரன் எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராகிவருவதாக தெரியவருகின்றது.
தனது மனையின் இறுதிச்சடங்கிற்காக சிறைச்சாலை பாதுகாப்புக்களுடன் வந்த ஆனந்த சுதாகரனின் மகள் அநாதரவாக தந்தையுடன் இணைந்து சிறை வாகனத்தில் செல்லமுற்பட்டமை கவனத்தை ஈர்த்திருந்தது.

இதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் பல தரப்புக்களும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கேட்டிருந்தன. 

அதன் தொடர்ச்சியாக தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனாலும் பின்னராக அதனை பற்றி வாயே திறந்திராக இலங்கை ஜனாதிபதி அநாதையாக சிறார்கள் வாழும் கிளிநொச்சியில் 4 ஆயிரம் பிள்ளைகளை வைத்து சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக வருவது வேடிக்கையாக உள்ளது. 

உண்மையில் ஜனாதிபதி சிறுவர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளார்ந்தமாக தொடங்குவதாக இருந்தால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.  அதனை விடுத்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை அவர் செய்யக் கூடாதென தெரிவித்துள்ளதுடன் அன்றைய தினம் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் சகிதம் போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments