மன்னார் புதைகுழி:மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை?

மன்னாரில்மேற்கொள்ளப்பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித மண்டையோட்டினுள் இருந்து உலோகத் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த உலோக துகள் துப்பாக்கிரவை சிதறலாவென கேள்வி எழுந்துள்ளநிலையில் அதனை ஆய்வுக்கு உட்படுத்த மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.


மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள கைவிடப்பட்ட படைத்தள வளாகத்தில் உள்ள மனித புதைகுழியை அகழும் நடவடிக்கை இன்று 12 ஆவது நாளாக மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆசீர்வதாம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் இந்த அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 23 மனித எலும்புகள், மண்டையோடுகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த அகழ்வுப்பணிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்து கடந்த 4 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழு உறுப்பினர் மிராக் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளை நேரடியாக சென்று அவதானித்திருந்தனர்.

விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளை பார்வையிட மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் ஆகியோர் நேற்று நேரடியாக விஜயம் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments