முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு குழு!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மேமாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தைபிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம்.இனி வருங்காலங்களில் சில வேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்க வேண்டிவரினும் கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்து பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இக்குழுவில் நிறுவனத்திற்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க எண்ணியுள்ளோம்.மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம். 


இக்குழுவானது 2019ம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்து கொள்ளவிரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறுசேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறுவேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேனெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


விண்ணப்பங்களை கௌரவமுதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்,முதலமைச்சர் அலுவலகம்,வடமாகாணம்,கைதடிக்கு அனுப்பி வைக்க கோரப்பட்டுள்ளது. குழு அங்கத்தவர் நியமனமானது உரியவாறு வெளிப்படையாக காலாகாலத்தில் நடைபெறுமெனவும் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

No comments