அப்பாற்பட்ட உறவாம்:தரகர் வேலையில் தமிழரசு நாளிதழ்!


கிளிநொச்சியில் தனியார் வங்கியான ஹற்றன் நஸனல் வங்கியில்; மே18 முள்ளிவாய்க்கால் தினத்தன்று நினைவேந்தலை செய்ததாக கூறி அவ்வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளமை தமிழ் மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் தமிழரசுக்கட்சி நாளிதழான உதயன் அவ்வங்கியின் சப்பைக்கட்டு முழுப்பக்க கட்டண விளம்பரத்துடன் இன்று வெளிவந்துள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் குறித்த வங்கியை புறக்கணிப்பு செய்து வருவதுடன்; வடக்கு ,கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அந்த வங்கியில் உள்ள தமது கணக்குகளை முடிவரும் நிலையிலேயே  தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமான பத்திரிக்கை இன்றைய இதழில் குறித்த வங்கியின் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செயற்பாடானது ஒட்டு மொத்த தமிழனின் உணர்வுகளை குறித்த வங்கியிடம் விற்பனை செய்துள்ளதாகவே மக்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் யாழில் எழுக தமிழா நிகழ்வை தமிழர்கள் ஒன்றினைந்து பேரினவாத அரசுக்கு ஓர் அழுத்தத்தை கொடுக்க முற்பட்ட வேளையில் குறித்த பத்திரிக்கையில் தமது முதற் பக்கத்தில் தலைப்பு செய்தியாக சனி பகவானுக்கு எள்ளெண்ணை எரிக்கும் நாள் என தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டதை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

குறித்த விளம்பரத்தில் கொடுக்கல் வாங்கலிற்கு அப்பாற்பட்ட உறவு தமிழ் மக்களுடன் இருப்பதாக அது விளம்பரப்படுத்தியுள்ளது.


இதனிடையே இன்னொரு தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரனோ குறித்த வங்கியை வடகிழக்கில் இழுத்துமூடவேண்டிவருமென நாடாளுமன்றிலேயே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments