சிங்கப்பூர் வீர மாகாளியம்மன் கோவில் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் இடை நீக்கம்

சிங்கப்பூரில் ‘லிட்டில் இந்தியா’ என்னும் பகுதியில் உள்ள செராங்கூன் சாலையில் இந்தியர்களால் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற வீர மாகாளியம்மன் கோவில் உள்ளது. 1988-ம் ஆண்டு அறக்கட்டளை நிர்வாக அந்தஸ்தை பெற்ற இந்த கோவிலில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் கோவிலின் கணக்குகளை தணிக்கை செய்தது.

இது தொடர்பாக சிங்கப்பூர் கலாசார, சமூக, இளைஞர் நலத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்து கோவிலின் கணக்குகளை சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் தணிக்கை செய்ததில் 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கோவில் பணம் பெரும் அளவில் சுருட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக குழுத் தலைவர் செல்வராஜூ மற்றும் செயலாளர் குமார் ஆகிய இருவரும் கோவில் நிர்வாக பணிகளில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகின்றனர்” என்று கூறப்பட்டு உள்ளது.

No comments