ஜப்பானிய நிபுணர் குழு சிறிலங்கா அதிபருடன் பேச்சு!

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர்  கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, பிரதமர் ஷின்சோ அபேயுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த சிறப்புக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
சிறிலங்காவில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆராய்வதற்கே இந்தக் குழு சிறிலங்கா வந்திருக்கிறது.
இந்தக் குழுவினருடனான சந்திப்பின் போது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மின்சக்தி திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி ஒன்று ஏற்படும் சாத்தியங்கள் உள்ளதால் அவசர கதியில் மின்சக்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பானிய உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க  விமான நிலைய அபிவிருத்தி மற்றும் கடல்சால் கண்காணிப்பு தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

No comments