முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இழுபறியில்! - மாணவர்கள் புறக்கணிப்பால் முதலமைச்சர் வருத்தம்


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நடந்து வரும் இழுபறிப் போரினால், குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளும் விடாப்பிடியான நிலையில் இருக்கின்றன. நேற்று முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

இதனால் இந்த விவகாரத்தில் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. அதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளாமை மிகவும் வருத்தமளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கெதிரானவர்கள் அல்ல.

ஆனால், தவறான பல கருத்துக்களை மாணவர்கள் ஆட்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஏற்பாட்டு ஆரம்ப கலந்துரையாடல் நேற்று வடமாகாண முதலமைச்சர் தலைமையில், முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொது அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. 'முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை நினைவுகூருவதற்கான எண்ணம் மாணவர்கள் மத்தியில் இருந்திருந்தால், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் எம்முடன் கலந்தாலேசித்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், நாங்கள் நினைவுதினத்தை செய்யப்போகின்றோம் எங்களுடன் நீங்கள் கலந்கொள்ளுங்கள் என்று கேட்பது வருத்தப்பட வேண்டிய ஒரு செயல்.

ஒவ்வொருவரும் நாங்கள் செய்கின்றோம் எங்களுடன் கலந்கொள்ளுங்கள் என்று கேட்டால் அவ்வாறு நாங்கள் செய்ய முடியாது. உத்தியோக பூர்வமாகவே ஒன்றினைச் செய்ய முடியும். கடந்த 3 வருடங்களாக செய்து வருகின்றோம். அதன் காணி எமது அமைச்சின் கீழ் வருகின்றது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனால், மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டிய உரித்து எமக்கு உள்ளது. உத்தியோகபூர்வமாக எமது கடமைகளைச் செய்து வருகின்றோம்.

இதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் எம்முடன் முற்கூட்டியே கலந்தாலோசித்து செயற்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், எமது கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளாமல் இருந்தமை மனவருத்தத்தைத் தருகின்றது. தனியாக செய்யாமல் அனைவரும் இணைந்து செய்வது உசிதம் எனக் கருதுவதால், எமது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கு எதிரானவர்களும் அல்ல. நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல.

எம்முடன் இணைந்து நினைவுதின நிகழ்வில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றை நடைமுறைப்படுத்த உதவி புரிய வேண்டும். எம்முடன் இணைந்து நினைவுகூரல் நிகழவை முன்னெடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments