தமிழர்களை அடக்குவதே ஆட்சியாளர்களின் விருப்பம்!


பெரும்பான்மையின ஆட்சியாளர்கள், எப்போதும் தமது ஆதிக்கத்தின் கீழேதான் மற்றவர்கள் அடிபணிந்துச் செயற்பட வேண்டுமென்ற நோக்கில் செயற்படுகிறார்களென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். அதனாலேயே, இன்றும் இனப்பிரச்சினை முடிந்தபாடில்லையென்றும் தமிழரசு என்பது, இன்னும் உருவாகவில்லையென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தமிழர் தாயகத்தை நாம் மறந்து விடமுடியாதென்றும், அதற்காக, தற்போதைய அரசாங்கத்தை, பல்வேறு வகையிலும் நிர்ப்பந்திக்க வேண்டியிருக்கிறதெனவும், அவர் குறிப்பிட்டார்.
தந்தை செல்வாவின் 41ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில், இன்று (26) அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் எஸ்.டபிள்யூ.டீ.பண்டாரநாயக்க, சிங்களம் மாத்திரம் தான் அரசகரும மொழியென்றுச் செயற்பட்ட போதிலும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு முக்கியமென்ற கொள்கையை அங்கீகரித்து, 1957ஆம் ஆண்டில், பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அக்காலத்தில், இடதுசாரிகள் மொழிகளுக்கிடையிலே சமத்துவம் வேண்டுமென்று கருதினார்களே தவிர, அதிகாரப் பகிர்வு தேவையென்ற அடிப்படையில், அதனைப் பாதுகாக்க அவர்கள் முன்வரவில்லை.

“இடதுசாரிகள், அந்த ஒப்பந்தத்தைப் பாதுகாத்திருந்தால், இன்றைய நிலைமையை நாங்கள் சந்திக்கும் தேவை இருந்திருக்காது. இலங்கையின் வரலாறு, வித்தியாசமானதாகவும் அமைந்திருக்கும்” எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments