சென்னை மெரீனாவில் போராட்டத்தினை தடுக்க சர்வீஸ் சாலைகள் மூடல்


தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த 6 வார காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி போராட்டம் நடந்தது. இதில் பெண்களும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் 18 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சர்வீஸ் சாலை மூடப்பட்டது. அங்கு வாகன போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் வழக்கம்போல் மெரீனா கடற்கரைக்கு வந்து செல்லலாம். போராட்டம் நடைபெறுவதை தடுக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் மெரீனா கடற்கரையில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

No comments