திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்துக் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெர்மனி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து இன்று காலை அவர் நாடு திரும்பினார். அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார் திருமுருகன் காந்தி.

வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பெங்களூர் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்தார் திருமுருகன் காந்தி.

அப்போது அவரை காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியினர் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments