சீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்


ந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இந்தியாவுக்காண பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று குற்றாலத்தில் நடந்த சித்திரை திருநாள் விழாவில் பங்கேற்றார். இதையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே, இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியா போன்ற நாடுகளில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை மீண்டும் தாயகத்துக்கு திருப்பி அழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், குழந்தைகளின் உயர்கல்வி ஒரு தடையாக இருக்கிறது. சிறிலங்காவின் தமிழர்களின் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும், இப்போது சிங்களவர்கள் நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். நாடு திரும்பும் அகதிகள் தாம் வாழ்ந்த இடங்களில் குடியேறவே விரும்புகின்றனர். ஆனால் அவர்களின் நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். மாகாணங்களுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு போதிய நலத் திட்டங்களை செயற்படுத்த முடியவில்லை. ஏற்கனவே அதிகாரங்கள் போதாது என்ற நிலையே இருந்தது. புதிய சட்டங்களின் மூலம் சிறிலங்கா அரசாங்கம், இருந்த அதிகாரங்களையும் பறித்து விட்டது. போருக்குப் பின்னரும், வடக்கில் ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழர்களின் நிலங்களையும், கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். படைகளை விலக்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments