பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்


நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க அரசு  நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 'நமது அரசு: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை - பேருவளைப் பிரதேசத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் தங்களது அதிகாரத்தை நீடித்துக்கொள்ளவும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரம்பின்றி நீடிக்கவும் 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தவர்களும், 20ஆவது திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொண்டவர்களும்தான் இன்று அரசின் மீது சர்வாதிகார முத்திரை குத்த முற்படுகின்றனர்.

தற்போது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் யாவும் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல. மாறாக, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் முறையான விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனவே தவிர, அரசு இதில் எங்குமே தலையிடுவதில்லை.

நீதிமன்றமே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதையா அல்லது பிணையில் விடுவிப்பதையா என்பதைத் தீர்மானிக்கின்றது. மாறாக, கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தங்களது அரசியல் எதிரிகளைச் சட்டரீதியாகக் கையாள்வதைவிட்டுவிட்டு, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தும், கடத்தியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீ வைத்ததுமே அவர்களது ஜனநாயகமாகக் இருந்தது. அவ்வாறான வரலாற்றைக் கொண்டவர்கள் யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும்.

பொதுப்பணத்தை தவறான முறையில் முறைகேடு செய்தவர்கள், அவர்களின் அரசியல் பின்புலம் எதுவாக இருந்தாலும் நிச்சயம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.அதில் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை.

தவறு செய்தவர், முன்னாள் ஜனாதிபதியாகவோ, முன்னாள் அமைச்சராகவோ அல்லது அவர்களின் மகனாகவோ இருந்தாலும் அது பற்றி அரசாங்கத்துக்கு கவலையில்லை.குற்றம் புரிந்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவுமே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments