நல்லூரில் தியாக தீபத்தின் ஆவண கண்காட்சி


தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் ஆவண கண்காட்சியை எதிர்வரும் 20ம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆவண கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக 12 நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடைய உயிரினை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்களுடைய 39ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகமெங்கும் எழுச்சிப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது

இந்த நிலையிலே வழமை போன்று தியாகதீபம் திலீபன் அவர்களுடைய ஆவணக் காப்பகத்தினராகிய நாங்கள் இம்முறையும் நான்காவது வருடமாக நல்லூரிலே தியாகதீபம் திலீபன் அவர்களுடைய பிரதான தூபி அமைந்திருக்கின்ற அமைவிடத்திற்கு முன்பாக இருக்கின்ற யாழ்ப்பாண மாநகரசபைக்கு சொந்தமான காணியினை உரிய முறைப்படி வாடகைக்குப் பெற்று, திலீபன் அவர்களுடைய வரலாற்றினையும், அவர் இந்த மண்ணிலே புரிந்த அளப்பரிய தியாகங்களினுடைய சம்பவங்களையும் பறைசாற்றுகின்ற, அடுத்த தலைமுறைக்கு எடுத்து இயம்புகின்ற ஒரு வரலாற்றுக் கண்காட்சியினை ஒழுங்குபடுத்தி இருக்கின்றோம்.

நான்காவது வருடமாக இம்முறை நடைபெறுகின்ற இந்த வரலாற்றுக் கண்காட்சியானது எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 7 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது. அது தொடர்ச்சியாக இம்மாதம் 27ஆம் திகதி வரைக்கும் அந்த ஆவணக் கண்காட்சியானது அந்தத் திடலிலே நடைபெறும்.

இம்முறை தியாகதீபம் திலீபன் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அவரோடு போராட்ட வாழ்விலே ஒன்றித்து பயணித்தவர்கள், அவர்களுடைய பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலே அவர் கல்வி கற்ற காலத்திலே அவர்களோடு கல்வி கற்றவர்கள் ஆகியோர் அனைவரும் இணைந்து இந்த ஒரு வரலாற்றுப் பயணத்தை இம்முறை நாங்கள் நிகழ்த்தி இருக்கின்றோம்.

எங்களுடைய கடந்த கால வரலாற்று ஆவணங்களில் காணப்பட்ட சில பிழைகள் மற்றும் குறைபாடுகளை தியாகதீபம் திலீபன் அவர்களுடைய குடும்பத்தினரும், அவரோடு ஒன்றித்து பயணித்தவர்களும் சுட்டிக்காட்டி அதனை திருத்தி ஒரு முழுமையான ஒரு ஆவணமாக நாங்கள் இம்முறை அதனை உருமாற்றி இருக்கின்றோம்.

எல்லா இடங்களிலும் இந்த ஆவணமானது காட்சிப்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய பேரவாவாக இருந்தது. நல்லூரிலே தியாகதீபம் திலீபன் அவர்களுடைய ஆவணக் காப்பகத்தினரால் காட்சிப்படுத்தப்படுகின்ற இந்த ஆவணமானது எதிர்வருகின்ற 20ம் திகதியும் 27ம் திகதியும் லண்டன் மாநகரிலே அமைதி மற்றும் நினைவேந்தல்களுக்கான மண்டபம் - குரேசியிலே இருக்கின்ற மண்டபத்திலே காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. அதேபோல பிரான்ஸ் நாட்டிலும் 26ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது.

வெளிநாட்டிலே நடைபெறுகின்ற அந்த வரலாற்று நிகழ்வுக்கும் புலம்பெயர் நாடுகளிலே இருக்கின்ற சகோதரர்கள் தங்களுடைய பிள்ளைகளை அழைத்துச் சென்று, அந்த உன்னதமான வீரனுடைய தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுகின்ற அந்தப் பணிக்கு பலம் சேர்க்க வேண்டும் - என்றார்.



No comments