தையிட்டி பவானி வீதியை விடுவிக்க முயன்றால் கைது செய்வோம் - வலி. வடக்கு தவிசாளரை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து மிரட்டிய பொலிஸார்
தையிட்டி விகாரதிபதியினால் , சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்பட்டால் , கைது செய்வோம் என தவிசாளரை பொலிஸார் மிரட்டியுள்ளனர்.
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை மன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரையும் மன்று வழக்கில் இருந்து முற்றாக விடுவித்துள்ளது.
அந்நிலையில் தவிசாளர் நீதிமன்றுக்கு வெளியே வந்த போது, காங்கேசன்துறை பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் , வீதியை விடுவிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மீறி அதற்கான நடவடிக்கையை எடுத்தால் , கைது செய்வோம் என தவிசாளரை மிரட்டியுள்ளனர்.
பொலிஸார் தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து , எதிர் தரப்பினரை வழக்கில் இருந்து விடுவித்த போதிலும் , நீதிமன்றுக்கு வெளியே தவிசாளரை குறித்த வழக்கு தொடர்பில் மிரட்டியுள்ளமை , நீதிமன்ற அவமதிப்பாகவும் , நீதித்துறையில் பொலிசாரின் தேவையற்ற தலையீடு தொடர்பில் விசனம் எழுந்துள்ளது.
அதேவேளை தன்னை மிரட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் விரைவில் வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment