காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் "தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி"
தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதனால் , சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையில் உள்ள எரிபொருள் களஞ்சிய சாலையில் தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன் போதே தீயணைப்பு பிரிவின் அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தீ விபத்து ஏற்பட்டால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து சேர்வதற்கு , காலதாமதம் ஏற்படுவதாக பரவலான குற்றச்சாட்டு எம் மீது வைக்கப்படுகிறது. ஆனால் , வீதியில் தீயணைப்பு வாகனங்கள் , ஒலி எழுப்பியவாறு வருகின்ற போதிலும் , வீதியில் செல்லும் ஏனைய வாகன சாரதிகள் , ஒதுங்கி வழிவிடுவதில்லை. போக்குவரத்து நெரிசலில் மத்தியிலையே நாம் வாகனத்தை செலுத்தி வர வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் ஏனைய வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
அதேவேளை , தீ விபத்து ஏற்பட்டால் , உடனடியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் , முதலுதவி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளையும் பயிற்சி செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.
விபத்தின் போது உடனடியாக செயற்பட கூடியவர்கள் , சம்பவ இடத்தில் உள்ளவர்களே எனவே அவர்களுக்கு அது தொடர்பிலான பயற்சிகள் , அறிவுகள் இருக்கும் போது , பாரிய அனர்த்தங்களை தடுக்க முடியும் எனவே பொதுமக்களுக்கான பயிற்சிகள் , விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சியில் , பெற்றோலிய தீயணைப்பு அதிகாரிகள் , யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் , முப்படைகளின் தீயணைப்பு பிரிவினர் ,பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் , சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி பிரிவினர் , சாரணர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் , வலி, வடக்கு பிரதேச சபை உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்





Post a Comment