செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு


செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 37ஆவது நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் சிசுக்களின் என்பு கூடு உட்பட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்ட நிலையில். அதனை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போது , குறித்த என்பு கூடு, கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது. 

இன்றைய தினமும் குறித்த என்பு கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அது நாளைய தினம் திங்கட்கிழமை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

செம்மணியில் புதைகுழிக்குள் இருந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04ஆம் திகதியும் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் , புதைகுழிக்குள் இருந்து கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் மீட்கப்படும் இரண்டாவது என்புக்கூடு இதுவாகும்.

அதேவேளை  நேற்றைய தினம்  சனிக்கிழமை ஒரு பெரியவரின் என்பு கூட்டுடன் , சிறியவரின் என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் , அத்தனையும் சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , அவையும் நாளைய தினம் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 91 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,446 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 434என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





No comments