யாழ்.போதனாவில் பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி விட்டு தப்பியோடிய ஆண்கள் - பொலிஸார் தீவிர விசாரணை


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது 

போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யுவதியொருவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் , குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர் 

நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் , 5 ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர். 

அதன் போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் , யுவதியின் தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார். 

அதன் போது , அங்கிருந்தவர்கள் , யுவதியுடன் முரண்பட்டு , அதனை தமது தொலைபேசியில் காணொளியையும் பதிவு செய்துள்ளனர். அதற்கு பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு உத்தியோகஸ்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர்  அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன் , தனது பாதுகாப்பு சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில் , அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments