செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம் - இன்று இரண்டு சிசுக்களின் என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிசுக்களுடையதாகும். அதேவேளை இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment