கிசோரின் பதவி பறிப்பை கண்டித்து சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் , சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் , சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் , சுரேஷ் பிரேமசந்திரன் , சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.



Post a Comment