பரதநாட்டியப் பயிலரங்கு சாதனை ?
அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில் கடந்த ஜூன் 14 ஆம் திகதி நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால் பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்விற்குப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமை தாங்கியிருந்ததுடன், பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த கின்னஸ் சாதனை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவே பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
எனினும், இந்த நிகழ்வு தொடர்பாகப் பெறப்பட்ட கின்னஸ் சான்றிதழில் இலங்கையின் பெயரோ, இலங்கையின் எந்தவொரு அரச நிறுவனத்தின் பெயரோ அல்லது இலங்கையர் ஒருவரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன செயலாளருமான துமிந்த நாகமுவ அம்பலப்படுத்தியுள்ளார்.
மாறாக, இந்த கின்னஸ் சான்றிதழின் உரிமை ஒரு இந்திய நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள அதன் கிளை நிறுவனத்திற்கும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்ற சுமார் 5,000 மாணவர்களின் குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் முதற்கட்டமாகப் பெருமளவிலான பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போதைய சூழலில், சான்றிதழுக்காக தலா 3,450 ரூபாயும், லோகோ (முத்திரை) மற்றும் இதர தேவைகளுக்காக தலா 2,350 ரூபாயும் பெற்றோர்களிடம் இருந்து மீண்டும் வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறுதியாக, இலங்கை பிள்ளைகளின் உழைப்பும், பெற்றோர்களின் பணமும் ஒரு இந்தியத் தனியார் நிறுவனத்திற்குப் புகழையும் கின்னஸ் சாதனையையும் பெற்றுக்கொடுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அநீதிக்குத் தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அனைத்து விபரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment