நினைவுகூர தடையில்லை!:மீள் எழுச்சி கூடாது!
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை மக்களுக்குக் காணப்படுகிறது .எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் நாட்டில் ஒருபோதும் இடமளிக்க முடியாது எனப் அனுர அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஊக்குவிக்கும் அல்லது அதற்குப் புத்துயிர் அளிக்கும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இருப்பினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்து காவல்துறை அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீர்த்தனனை, பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் விசேட கருணையின் அடிப்படையில் மட்டுமே சங்கீர்த்தனனின் விடுதலை தொடர்பான உடனடி முடிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment