சுரேஸ் சாலேக்கு மனக்குழப்பம்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாக சுரேஸ் சாலேவின் மகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சுரேஸ் சாலேவோ, தனக்கு எதிராக ஈஸ்டர் விசாரணைகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சானி அபேசகரவை அகற்ற வேண்டுமென கோரியுள்ளார்.
அத்துடன் தான தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கும் பதிலாய் வேறு ஒரு அறை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதனிடையே சாலேயின் விடுதலைக்காக சத்தியாக்கிரகத்தில் இருக்கும் ஒருசிலர் சுரேஸ் சாலே விடுதலையாகும் வரை சத்தியாக்கிரகம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் விமல் வீரவன்சவோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அல்லாமல் வேறு ஏதேனுமொரு சட்டத்தில் சாலே விசாரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டால் தமக்குப் பிரச்னை இல்லை என புதிய விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மக்களைச் சந்தேகத்துடன் பார்த்தவர்கள்,காலம் முழுக்க முஸ்லிம்களைப் பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லி அரசியல் செய்தவர்கள்,தமது அரசியல் கொள்கைக்குத் தொடர்ச்சியாக வலுசேர்க்கும் வகையில் இரு பெரும் சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கி வைக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் வீரியமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றவர்கள் இன்று சுரேஸ்சாலேவிற்கு எதிராக அந்தச்சட்டம் பாய்ந்தபோது திடீர் ஜீவ காருண்ய்ம் வெளிப்படுத்திவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Post a Comment