கி.மு. 4350 முதல் 4020 வரை யாழ்ப்பாண வரலாறு!



வட இலங்கையின் தீவுப் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் ஆரம்பகால குடியேற்றத்திற்கான சான்றுகளை 'Journal of Island and Coastal Archaeology' இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண தீவகப் பகுதியில் உள்ள வேலணைத் தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, ஒரு விரிவான கடல் சிப்பி மேடு (Shell midden) கண்டறியப்பட்டது. இதன் ஆரம்பகால கடல்சார் படிவுகள் தோராயமாக கி.மு. 4350 முதல் 4020 வரை (6300 - 5970 cal BP) பழமையானவை என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னைய ஆய்வுகள் இங்கு மனித நடமாட்டத்துடன் கூடிய தெளிவான குடியிருப்பானது  கி.மு. 1510 (3460 cal BP) ஆம் ஆண்டிற்கு உரியது என விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தியிருந்த நிலையில் தற்போதைய ஆய்வு இப்பிரதேசத்தில் மனிதர்கள் அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரேயே வாழ்ந்திருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே வட இலங்கையில் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய மிகப்பழைய மனிதக் குடியேற்றமாகும்.

இது குறித்து முனைவர் சிறிவர்தன விவரிக்கும்போது:

"வேலணையில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போலவே, புங்குடுதீவிலும் கி.மு. நான்காயிரமாண்டு காலப்பகுதியில் இருந்து 'கஃப்ரேரியம் பெக்டினேட்டம்' (Gafrarium pectinatum) வகை சிப்பிகளின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. இந்தப் போக்கு, பெருகிவரும் மனிதத் தேவைகளையும் சுற்றுச்சூழல் அழுத்தத்தையும் பிரதிபலிக்கக்கூடும். வரலாற்று ரீதியாக மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு முக்கியமான சான்றாகும்," எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வானது தீவகப் பகுதிகளில் கடல் மட்ட உயர்வு மற்றும் மனிதர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

ஆய்வாளர்கள் வேலணையில் கண்டெடுத்த சிப்பி மேடுகள், அந்தக்கால மக்கள் கடலுணவை (குறிப்பாக சிப்பிகள் மற்றும் நண்டுகள்) பெருமளவில் உட்கொண்டதைக் காட்டுகின்றன.

அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், தென்னிந்தியாவின் 'பெருங்கற்கால' (Megalithic) பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இப்பகுதிகளில் தற்போதிருப்பதை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன் பின்னரே தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலப்பரப்பாக மாறியுள்ளன.

வேலணைக்கு அருகிலுள்ள புங்குடுதீவிலும் இதேபோன்ற சான்றுகள் கிடைத்துள்ளன.

பேராசிரியர் சிறிவர்தன குறிப்பிட்டது போல, சிப்பிகளின் அளவு சிறுத்துப்போனது, மனிதர்கள் அளவுக்கு அதிகமாக அவற்றை உணவிற்காக சேகரித்ததைக் காட்டுகிறது (Over-exploitation). இது அந்தக்காலத்திலேயே சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்டதைக் குறிக்கும் ஒரு முக்கிய 'ப்ராக்ஸி' (Proxy) ஆகும்.

இந்த ஆய்வு ஏன் முக்கியமானது என்றால், அந்தக்கால மனிதர்கள் வெறும் தரைவழியாக மட்டும் பயணிக்காமல், கட்டுமரங்கள் அல்லது படகுகள் மூலம் தீவுகளுக்கு இடையே பயணம் செய்துள்ளனர் (Seafaring abilities) என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கி.மு. 1500 காலப்பகுதியிலேயே அவர்கள் கடலைத் தாண்டி குடியேறியிருப்பது வியக்கத்தக்கது.

யாழ்ப்பாணத்தின் கந்தரோடை மற்றும் பூநகரி போன்ற இடங்களில் கிடைத்துள்ள சான்றுகளோடு இந்த வேலணை ஆய்வை ஒப்பிடும்போது, இலங்கையின் வடபகுதி மிக நீண்டதொரு நாகரிக வரலாற்றைக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

இந்த ஆய்வுத் தரவுகள், வட இலங்கையின் ஆரம்பகால மக்கள் வெறும் வேட்டைக்காரர்களாக மட்டுமன்றி, கடலைப் பயன்படுத்தத் தெரிந்த 'கடலோடிகளாக' (Coastal foragers) வாழ்ந்ததை பறைசாற்றுகின்றன.

No comments