வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடங்களை வாடகைக்கு வழங்குவோருக்கு எச்சரிக்கை
நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் உரிமையாளர்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறுகிய கால அல்லது நீண்ட கால அடிப்படையில் வாடகைக்கு பெறப்படும் இடங்களைப் பயன்படுத்தி, பல்வேறு மோசடிச் செயல்கள் மற்றும் குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2025) மற்றும் இவ்வருடத்தின் (2026) இதுவரையான காலப்பகுதியில், குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறி தங்கியிருந்த பெருமளவான வெளிநாட்டவர்கள் இவ்வாறான தங்குமிடங்களிலேயே வைத்து கணினி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இவ்வாறான இடங்களை மறைவிடங்களாகப் பயன்படுத்துவதால், கட்டட உரிமையாளர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகிறது.
ஆகையால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது பிரிவின் கீழ், ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் விபரங்களைத் திரட்டும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ளவது அவசியம்.
இதன்படி, வீட்டு உரிமையாளர்கள் அல்லது பிரதான குடியிருப்பாளர்கள், தமது வீட்டில் தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்கள், வேலையாட்கள் மற்றும் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் (வாடகைக்கு இருப்போர்) குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
குடியிருப்பாளர்களில் மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இதனைத் தவறவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தமது இடங்களை வாடகைக்கு வழங்கும் போது, அதனைப் பெறுபவர்களின் விபரங்கள் மற்றும் தேவையினை உறுதிப்படுத்துவதன் மூலம் உரிமையாளர்களும் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேலும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து தகவல்கள் தெரிந்திருப்பின் 119, 118 ஆகிய பொலிஸாரின் துரித தொலைபேசி இலக்கதை தொடர்புக் கொண்டோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment