எயார் பஸ் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு


எயார் பஸ் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபரான கபில சந்திரசேன உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 5 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம, 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் பொய்க்கூறி முன்னிலைப்பட்ட இருவர் போலி உறவினர்கள் என தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 13ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. 

இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையிலேயே அவர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கதவில் தொங்கிய நிலையில், அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

No comments