வடக்கில் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை


வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய புரிதல் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி, மக்களின் நிலங்களை மக்களுக்கே திரும்ப ஒப்படைப்பதற்கான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, கணிசமான அளவு நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

மேலும், மூடப்பட்டிருந்த வீதிகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இராணுவ முகாம்களின் தேவைகளைக் குறைத்து, அந்த நிலங்களையும் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படும் நிலங்களை சாதாரணமாகப் பகிர்ந்தளிக்காமல், வடபகுதி மக்கள் சுயதொழில் அல்லது வணிகங்களைத் தொடங்கி தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

காணிகள் விடுவிப்பது மாத்திரமின்றி , விடுவிக்கப்படும் காணிகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் (Budget) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம்:புதிய வீடுகள் அமைத்தல் கிராமப்புற வீதிப் புனரமைப்பு போன்ற பணிகள் அடுத்தடுத்து முன்னெடுக்கப்படும்.

அதற்கிடையில் சிலர் அவசரப்பட்டு அல்லது போதிய புரிதல் இல்லாமல் போராட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.

அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்க, தோல்வியடைந்த அரசியல் சக்திகள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், அரசாங்கம் தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.


No comments