மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும் - கனடா உயர்ஸ்தானிகரிடம் சஜித் தெரிவிப்பு
இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை, மாலைத்தீவு நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள், நீடித்த இன நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இருதரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும் என தெரிவித்ததுடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கான தனது அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
அதேவேளை, இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சவால்கள் குறித்தும் இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக “டித்வா” சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார சவால்கள், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் மற்றும் வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகள் அவசியம் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இலங்கையின் மறுசீரமைப்பிற்காக சர்வதேச உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கனடாவின் முயற்சிகளை பாராட்டிய சஜித் பிரேமதாச, “ஆக்ஸஸ் ஸ்ரீலங்கா” எனும் கனேடிய டொலர் 5 மில்லியன் வேலைத்திட்டத்தையும் வரவேற்றுள்ளார்.
இந்த திட்டம் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாயத்தை மேம்படுத்துதல், நிலையான காணி மற்றும் நீர்வள முகாமைத்துவம், வறண்ட பிரதேசங்களில் உள்ள பெண் விவசாயிகளை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களைக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment