இயக்கச்சியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்க முயற்சி - காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள்


கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 26 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக காணி உறுதிகளுடன் காணி உரிமையாளர்களின் தலைமையில்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட இயக்கச்சி பகுதியில் உள்ள 18 குடும்பங்களுக்கு சொந்தமான 25.73 ஏக்கர் காணியினை அடாத்தாக இராணுவத்தினர் கையகப்படுத்தி கடந்த 16 வருடங்களாக இராணுவத்தின் 4ஆவது பட்டாலியனின் இலத்திரனியல் இயந்திர பொறியியல் பிரிவினரின் பாரிய முகாம் அமைத்துள்ளனர் 

குறித்த முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் , தனியார் காணிகள் தவிர்ந்து , முத்துமாரி அம்மன் கோவில் , பொது நோக்கு மண்டபம் , சிறுவர் முன் பள்ளி என்பனவும் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த காணியினை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு ஏதுவாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நில அளவை திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் காணி உரிமையாளர் காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு ஆதரவாக , அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காணி அளவீட்டு பணிகளை நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட செயலர் நிலஅளவை திணைக்களத்தினருக்கு அறிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது 

No comments