1000 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு ரட்ணஜீவன் கூலுக்கு வழக்கு


தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் 'கொழும்பு டெலிகிராப்' பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதியிருந்த ரட்ணஜீவன் கூல், போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் சட்டத்தரணிகளை  காப்பாற்றும் நோக்கில் கலாநிதி கு. குருபரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து, குறித்த சட்டத்தரணிகளை காப்பாற்றி விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனக் குறிப்பிட்டுக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

அக்கட்டுரையை அடியொற்றி அதன் பின்னர் பல்வேறு செய்திகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த, நிலையில், அச்செய்தியானது தமது தொழிலையும், தமது தொழில்சார் நேர்மையையும் சவாலுக்கு உட்படுத்தும் நோக்கிலும், தமது தொழிலுக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் முன்வைக்கப்பட்ட அவதூறான குற்றச்சாட்டு என சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரட்ணஜீவன் கூலினுடைய அக்கூற்றுகள் அவதூறானவை எனவும், தமக்கு இதன்மூலம் ஏற்பட்ட இழப்பீடாக 1000 மில்லியன் (100 கோடி) ரூபாயை அவர் செலுத்த வேண்டும் எனக் கோரியுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments