கிளிநொச்சியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கி சூடு


கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். 

மற்றுமொரு உழவு இயந்திர சாரதி , உழவு இயந்திரத்தை கைவிட்டு , தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

அதேவேளை குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பரந்தன் - பூநகரி வீதியில் வீதி சோதனை நடவடிக்கையில் நேற்றைய தினம் இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டிருந்த வேளை , வீதியில் மணலுடன் வந்த இரண்டு உழவு இயந்திரங்களை வழிமறித்துள்ளனர். 

அதன் போது உழவு இயந்திரம் ஒன்று , பொலிஸ் விசேட அதிரடி படை வீரை மோதி தள்ளிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை அதன் மீது பொலிஸ் அதிரடி படையினர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர். 

அதனை அடுத்து இரண்டு உழவு இயந்திரங்களையும் வீதியில் கைவிட்டு , சாரதிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய நபர் தப்பி சென்றுள்ளார். 

கைது செய்யப்பட்ட சாரதியையும் , மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கிளிநொச்சி பொலிஸார், தப்பியோடிய மற்றைய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments