யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நீக்கப்பட மாட்டாது - அரசாங்கம் உறுதி
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.
'யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது அடிப்படையற்ற ஒரு செய்தியாகும். பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அநாவசிய பதற்றங்களை ஏற்படுத்தவோ அச்சத்தை ஏற்படுத்தவோ முயற்சிக்கப்பட்டிருக்குமாயின் அது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் அவதானம் செலுத்தப்படும்.
அதற்கமைய இவ்வாறான போலி செய்திகளை சமூகமயப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய நபர் யாராக இருந்தாலும், அவரால் பகிரப்பட்டுள்ள இந்த போலி செய்தி தொடர்பில் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.' என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment