முல்லைத்தீவு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படைக்கு பணிப்பு
முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக சுற்றுக்காவல் நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் கடற்தொழில் அமைச்சின் செயலர் வலியுறுத்தியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும், கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பணிப்பின் பேரில் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி. கோலித கமல் ஜினதாச மற்றும் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோர், மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
இதன்போது மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டன.
இதனையடுத்து முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை தளத்திற்கு விஜயம் செய்து, சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்படை ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறும் வலியுறுத்தினர்.
பின்னர் புல்மோட்டை கடற்படைத் தளத்திற்கு சென்று அங்குள்ள கடற்கடை அதிகாரி மற்றும் கரையோரப் பாதுகாப்பு அதிகாரியுடன் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் முகத்துவார வாயில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இச்சந்திப்புகளில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் பங்கேற்றிருந்தார்.
Post a Comment