செம்மணியில் தொடர்ந்து மனித எச்சங்கள்!
செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று புதன்கிழமை மேலும் மூன்று மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்படுள்ளது. இதுவரை 169 மனித எச்சங்கள் செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து அடையாளம் காணப்பட்டு இவற்றில் 158 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே செம்மணியில் ஒரே நாளில் 16 எலும்புக்கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (26) மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது .அதேவேளை கட்டம் கட்டமாக 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 166 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்150 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment